இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது!’ – முன்னாள் இன்ஸ்பெக்டரின் பாசிடிவ் முயற்சி
குழந்தைகளுக்கு சிறுவயது முதலே, ஆழ்துளைக் கிணறுகளின் ஆபத்துகள் குறித்து அவரவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்க உள்ளேன்.
சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் கோர மரணம் ஏற்படுத்திச் சென்ற சோக வடு இன்னும் நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது. எனது இடைவிடாத தொடர் விழிப்புணர்வு பயணத்தின்மூலம், அதைத் தடுத்து நிறுத்துவேன்" என்று தமிழகம் முழுக்க தனது இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், முன்னாள் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. எவ்வளவுதான் நாம் டெக்னாலஜியில் உச்சம் தொட்டாலும், ஆழ்துளைக் கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை உயிரோடு மீட்க இன்னும் கருவியைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, ஆழ்துளைக் கிணறுகள் பிஞ்சுகளை விழுங்கும் மரணக்கிணறுகளாக தொடர்வது, சோக தொடர்கதையாகி வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சுஜித் என்ற சிறுவனையும் நாம் ஆழ்துளைக் கிணறு என்னும் எமனிடம் பறிகொடுத்தோம். இந்த நிலையில், கரூர் மாவட்டதைச் சேர்ந்த சிவாஜி என்ற முன்னாள் காவல் ஆய்வாளர், தனது இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுக்க, ஆழ்துளைக் கிணறுகள் மரணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயணப்பட்டிருக்கிறார். பணியில் இருந்த காலத்திலேயே இவர் பல விஷயங்களுக்காக இப்படி விழிப்புணர்வு பிரசாரம் செய்திருக்கிறார். இந்த நிலையில், அவ்வப்போது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறு மரணங்களைத் தடுக்க, இப்போது விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கரூர் ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. கரூரில் தொடங்கிய சிவாஜியின் இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். இதுகுறித்து சிவாஜியிடம் பேசினோம்.
தமிழ்நாடு முழுக்க சென்று, மக்களைச் சந்தித்து, தங்கள் வயல்களில், வீடுகளின் அருகே போடப்பட்டு, பயன்படுத்தாமல் இருக்கிற ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூடச்சொல்லி வலியுறுத்த இருக்கிறேன். அவர்களை மூடவைத்தபிறகுதான், அந்தப்பக்கம் நகர்வேன். இந்த விஷயத்தில் அரசை நாம் குறைகூற முடியாது. நம் வீட்டில், நம் வயலில், நம்மால் போடப்பட்ட தேவையில்லாத போர்வெல்களை நாம் உடனே மூடிவிட்டால், நமக்குதான் நல்லது. இதுபற்றி நான் விழிப்புணர்வு பயணத்தின்போது சந்திக்கும் மக்களிடம் வலியுறுத்துவேன்.
அதேபோல், பொதுமக்களிடம் ஆழ்துளைக் கிணறு மற்றும் பேரிடர் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் விவரங்கள் சொல்ல வேண்டும். மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே, ஆழ்துளைக் கிணறுகளின் ஆபத்துகள் குறித்து அவரவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்க உள்ளேன். என்னுடைய தொடர் விழிப்புணர்வு பிரசார பயணம் மூலம், தமிழகத்தில் இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நடக்கவிடாமல் தடுப்பேன்” என்றார் நம்பிக்கையுடன்!
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்