விளாத்திகுளம் அருகே – மனைவியை கொலை செய்தவர் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது : டிஎஸ்பி. பிராகாஷ்அதிரடி நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்தவர் உட்பட 5பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி வயது 43 மனைவி முருகலெட்சுமி (36) என்பவரை கடந்த 24.04.2021 அன்று அவரது கணவர் முனியசாமி மற்றும் அவரது சகோதர்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் சங்கர் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் (29) ஆகியோர் தீயிட்டு எரித்து கொலை செய்த வழக்கில் தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், நீலமேகம், சுப்புராஜ் (எ) பொன்ராஜ் மற்றும் முனியசாமி ஆகியோரை கைது செய்தனர்.
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னீர்குளம் கருப்பசாமி கோயில் அருகே அதே பகுதியைச் சேர்ந்தவர்களான மலையாண்டி மகன் ராமகிருஷ்ணன் (41), மாடசாமி மகன் தங்கதுரை (37) மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா மகன் கருப்பையா (58) ஆகியோரை முன்விரோதம் காராணமாக பன்னீர்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (42) மற்றும் அவரது தந்தை ராமர், அவரது சகோதரர்கள் சுடலை மற்றும் கருப்பசாமி ஆகியோர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
இவ்வழக்கில் முக்கிய எதிரியான மாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கயத்தாறு காவல்நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பேரில் மேற்கண்ட 5 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி, அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் 2) சங்கர் , 3) நீலமேகம், 4) சுப்புராஜ் (எ) பொன்ராஜ் 5) பன்னீர்குளம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் மாரியப்பன் ஆகிய 5பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ், உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் எதிரிகள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கடந்த 4 மாதங்களில் மட்டும் 68 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.