Police Department News

ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா?

ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா?

மதுரையில் ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்

மதுரை அனுப்பானடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணன் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றுவது வழக்கம். சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் சரவணன் இரவு நேரங்களில் ரோடுகளில் சுற்றி அழைந்து பிளாட்பாரங்களிலேயே தூங்கி விடுவாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் தவிட்டுச்சந்தை ரோட்டோ ரத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் அங்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கொலை செய்தது யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் சரவணன் ரோட்டோரத்தில் தூங்கியிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் சரமாரியாக மிதிப்பது பதிவாகி உள்ளது. வலியால் துடித்த சரவணன் சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி கிடப்பதும் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.

சரவணனை கொலை செய்த நபரும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.