Police Department News

மதுரையில் வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்

மதுரையில் வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்

மதுரை விளாங்குடியை அடுத்த கரிசல்குளம் அண்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் பூமன்காளை என்பவரின் மகன் பூமிநாதன் (வயது 19). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அந்த கும்பலிடம் இருந்து பூமிநாதன் தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் துரத்தி சென்றனர்.அவர்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக கரிசல்குளம் அய்யர் தெருவை சேர்ந்த திருவேட்டை என்பவரின் வீட்டுக்குள் பூமிநாதன் புகுந்தார்.

இருந்தபோதிலும் அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்து பூமிநாதனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொலைக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பூமிநாதன் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் தனது நண்பரான முருகானந்தம் என்பவருடன் அந்த பகுதியில் ரவுடி போன்று திரிந்து உள்ளார்.

இந்த நிலையில் கரிசல் குளத்தை சேர்ந்த ஜீவா (21) என்பவரை பூமிநாதன் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர், அவர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ஜீவா தனது நண்பர்களான ஜீவமணி (25), அவரது சகோதரர் ராஜா (22), நவீன்பிரசாத் (24) ஆகியோர் உதவியுடன் நேற்று மாலை பூமிநாதனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஜீவா, ஜீவமணி, ராஜா, நவீன்பிரசாத் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் போலீசாரின் பிடியில் இன்று சிக்கினர். இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.