`5000 பக்க அறிக்கை; அடுத்தவாரம் அதிரடி!’- குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரத்தில் களமிறங்கும் போலீஸ்
தமிழகத்தில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்களின் பட்டியல் தயாராக உள்ளது. அடுத்த வாரத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ரவி நம்மிடம் தெரிவித்தார்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (Federal Bureau Of Investigation), மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் அதிகம் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக காவல்துறைக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் யார், யாரெல்லாம் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, பட்டியலையும் தயாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி நம்மிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி ரவி, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள பட்டியலின் அடிப்படையில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவகளைக் கைது செய்ய அடுத்த வாரத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினால்கூட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்ஸோ சட்டத்தின்கீழ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். கூடுதலாகத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் பிரிவின்கீழும் வழக்குகள் பாயும்" என்றவரிடம், மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்...
மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாகத் தகவல் உள்ளதே..?”
அதற்கான புள்ளிவிவரம் இல்லை. ஆனால், சென்னையில் அதிகமானவர்கள் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்பதாகத் தகவல் உள்ளது. அவர்கள் யார், யாரென்ற விவரங்களை சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளோம். அந்தப் பட்டியலில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு 5,000 பக்கங்கள்கொண்ட அறிக்கையாக அனுப்பியிருந்தது. அதில், எந்ததெந்த டிவைஸ்களிலிருந்து குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் பார்க்கப்பட்டன. செல்போன் நம்பர்கள், ஐபி நம்பர், எந்த நெட்வொர்க், எத்தனை மணிக்கு பார்த்தார்கள், யாருக்கெல்லாம் அந்த வீடியோக்களை அனுப்பினார்கள் போன்ற புள்ளிவிவரங்கள் உள்ளன. அதன்அடிப்படையில், தமிழகத்தில் உள்ளவர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளோம். இதையடுத்து, கமிஷனர் அலுவலகங்களுக்கும் எஸ்.பி அலுவலகங்களுக்கும் அடுத்த வாரம் அந்தப் பட்டியலை அனுப்பி வைத்துவிடுவோம். இதையடுத்து, குழந்தைகளின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் பார்த்தவர்கள்மீது நடவடிக்கை பாயும். அதைப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கண்காணிக்கும்".
குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்களைப் பார்த்தவர்களை எந்த அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளீர்கள்?
இதில் இரண்டு வகை உள்ளன. அதாவது, வெளிநாடுகளின் ஆபாச இணையதளங்களில் குழந்தைகளின் வீடியோக்கள், புகைப்படங்களை டவுண்லோடு செய்தவர்கள் ஒரு வகை. இன்னொரு வகை, தமிழகத்திலேயே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை எடுத்தவர்கள்
இந்தப் பட்டியலைத் தயாரிக்க தனி டீம் ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா?”
ஆமாம்... இந்த டீமுக்கு நோடல் ஆபீஸராக சென்னை எஸ்.பி ஜெயஸ்ரீ உள்ளார். அவரின் தலைமையில்தான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தயாரித்துள்ள பட்டியல், அடுத்த வாரத்தில் கமிஷனர் அலுவலகங்களுக்கும் மாவட்ட எஸ்.பி அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளது".
தமிழகத்தில், போக்ஸோ சட்டத்தின்கீழ் எத்தனைபேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளன?”
போக்ஸோ சட்டத்தின்கீழ், கடந்த மாதத்தில் மட்டும் 22 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில், 30 பேருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸார்தான், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், பரவலாகப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துவருகின்றன".
போக்ஸோ சட்டத்தின்மூலம் எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்?”
“போக்ஸோ சட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரிவு உள்ளது. குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்களைப் பார்ப்பது போக்ஸோ சட்டத்தின்படி குற்றம். அவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து செல்போன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை டவுண்லோடு செய்து வைத்திருப்பது, அதை சமூக வலைதளங்களில் பதிவுசெய்வது, மற்றவர்களுக்கு அனுப்புவது ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றம்”.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்