Police Recruitment

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம்

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் விவரங்களை ஒரு கும்பல் ஆன்லைன் மூலமாக சேகரித்தனர்.

பின்னர் அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக உதவித்தொகை பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர்.

மேலும் அந்த கும்பல் வாட்ஸ் அப்பில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு உதவிதொகை பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி உதவிதொகை பணம் பெறுவதற்காக கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதே போல் கோவையில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் பணம் மோசடி நடைபெற்றது.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். விசாரணையில், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் டேவிட் (வயது32), லாரன்ஸ் ராஜ் (28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகிய 5 பேரை கடந்த மாதம் 16-ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இந்தநிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதற்கான உத்தரவு நகலை போலீசார் சிறை அதிகாரியிடம் அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published.