Police Recruitment

ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு

ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயன்மான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் மகன் முகேஷ் (வயது26). இவரது மனைவி இசைவாணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முகேஷ் சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி அங்கே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தென்காசியில் நடைபெறும் உறவினர் இல்ல விழா விற்காக வருவதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டார். பஸ் அதிகாலை 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர் திருமங்கலம் பஸ் நிலையத்தை கடந்தபோது முகேஷ் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பஸ்சில் பயணித்த வாலிபர் இறந்ததால் பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பஸ்சில் பயணிந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்து பரிதவித்தனர். பின்னர் பஸ் அனுப்பி வைக்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published.