ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு உதவி ஆய்வாளர், 5 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். தேர்தல் அமைதியாக நடப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய போலீஸார், துணை ராணுவத்தினருக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதி 1-வது தெருவில் எண் 23 முதல் 32 வரையிலான வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியலில் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இதைக் கண்டித்து அவர்கள் வாக்குச்சாவடிகளை நேற்று முற்றுகையிட்டனர். தெருக்களில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் அனைவரும் இப்பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். ஆனால், எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க மறுக்கின்றனர்’’ என்றனர்.
அங்கு வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், முஸ்லிம்களுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் முறையிடுமாறு அவரிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.