தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் மோடி படம் இருப்பதுபோல் மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டதாக மதுரையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற படம் வாட்ஸ்அப்பில் வெளியானது. தொடர்ந்து, பல சமூக வலைதளங்களிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து குமரி மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் கனகராஜ், கன்னியாகுமரி போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கன்னியாகுமரியில் வியாபாரம் செய்துவரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி(35) என்பவரை கைது செய்தனர்.