கரூரைச் சேர்ந்த இளம்பெண் கொலையில் ஓராண்டு கழித்துத் துப்புத் துலங்கியதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் 3பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்த இளையராஜா தன் காதல் மனைவி பர்வீன் பானுவைக் காணவில்லை என 2015ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்துப் பர்வீன் பானுவிடம் செல்போனில் அதிகம் தொடர்பில் இருந்தவர்கள் பெருங்களத்தூரைச் சேர்ந்த ராஜா, மாணிக்கம் ஆகியோர் எனத் தெரியவந்தது. இருவரிடமும் பீர்க்கன்கரணை காவல்துறையினர் விசாரித்ததில் முதலில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த பர்வீன்பானு அவரைப் பிரிந்து மாணிக்கம் என்பவருடன் வாழ்ந்து வந்ததும் பின்னர் அவரையும் பிரிந்து சென்றதும் தெரியவந்தது. ராஜாவும் மாணிக்கமும் சேர்ந்து பர்வீன்பானுவைக் கழுத்தை நெரித்துக் கொன்று கிஷோர் என்பவரின் உதவியுடன் உடலைத் தாம்பரம் முடிச்சூரில் உள்ள கிணற்றில் கல்லைக் கட்டிப் போட்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் அடையாளம் காட்டிய கிணற்றில் இருந்து அழுகிய உடலை வெளியில் எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்