
டாக்டர்களுக்கு மருந்து சீட்டு எழுத புது கட்டுப்பாடு
ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் டாக்டர்கள் எழுதித்தரும் மருந்து சீட்டில் அந்த மருந்து எதற்காக பரிந்துரைக்கப்படுகிறது என்பதை மிக துல்லியமாக குறிப்பிடுவது இனி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு தொற்றுக்களை குணப்படுத்துவதற்காக ஆன்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணியிர் கொல்லி மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர் இந்த மருந்துக்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உடலிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகள் அவற்றை கொல்ல வடிவமைக்கப்பட்ட மருந்துக்களின் செயல் திறனை முறியடிக்கின்றன.
இதன் காரணமாக அந்த கிருமிகள் உடலில் இருந்து அழியாமல் மேலும் வளர்ச்சியடைய துவங்குகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடலில் உள்ள பாக்ட்டீரியாக்கள் வலிமை பெறுகின்றன.
நாளடைவில் ஏ.எம்.ஆர்., என்றழைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு குறைபாடு ஏற்படுகிறது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலகின் 10 கொடிய நோய்களில் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு குறைபாடும் முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே ஆன்ட்டிபயாட்டிக் பரிந்துரை மற்றும் விற்பனையில் பல் வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
இது குறித்து டாக்டர்கள் மருத்துவ கல்லூரிகள் மருத்துவ சங்கங்களுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளுக்கான இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் விபரம்:
அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே ஆன்ட்டிபயாட்டிக் மருந்துக்களை மருந்தகங்கள் விற்பனை செய்ய வேண்டும் மருந்து சீட்டு இன்றி வாடிக்கையாளர்களுக்கு அவற்றை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் டாக்டர்கள் பரிந்ரைக்கும் மருந்து சீட்டில் அந்த குறிப்பிட்ட மருந்து எந்த நோய் சிகிச்சைக்காக பரிந்துரைக்கபடுகிறது என்ற காரணத்தை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
