Police Department News

கோவில்களில் திருட்டு: 3 பேர் கைது

கோவில்களில் திருட்டு: 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எல்லைக்குட்பட்ட மீரான் பாளையம் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி கழுத்தில் அணியப்பட்டிருந்த 5 பவுன் தாலி செயினை கடந்த 10.8.21 அன்று மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் கலா தலைமையில், எஸ்.ஐ. காசிலிங்கம், முதல்நிலைக் காவலர்கள் மகேந்திரன், முத்துக்காமாட்சி மற்றும் பால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர், கோவில் பகுதிகளிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் கோவில் பகுதிகளில் செல்வதும், வருவதுமாக இருப்பது தெரியவந்தது.

அதில் காணப்பட்ட அடையாளங்கள் மற்றும் வாகன எண்ணை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில், கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த கண்ணன் (43), டால்துரை பங்களாத் தெருவை சேர்ந்த செண்பகவள்ளி (எ) ராணி (55) மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈச்சந்தா பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரி (32). ஆகிய 3 பேரும் திருடியது தெரியவந்தது.

மேற்படி தனிப்படையினர் இன்று (12.8.21) எட்டையபுரம் செல்லும் ஆற்று பாலத்தின் அருகே வாகன தணிக்கை செய்யும்போது மேற்படி திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து, விளாத்திக்குளம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில்,

மேற்படி எதிரிகள் 10.8.21 அன்று முத்துமாரியம்மன் கோவிலிலும், 8.8.21 அன்று வேம்பார் சாலையிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பொட்டுத் தாலியையும், 4.2.21 அன்று எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளம்புவனத்திலுள்ள பூமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகள் திருடியதாக 4 வழக்குகளும்,

14.4.21 அன்று முத்தலாபுரம் சிவன் கோவிலில் பொட்டுத் தாலி திருடியதும், 16.3.21 அன்று எட்டயாபரம் மேலநம்பியாபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சாமியின் வெள்ளி கிரீடம் திருடியதும், 5.8.21 அன்று பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செவல்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் பொட்டுத் தாலி திருடியதும், 10.8.21 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மந்தித்தோப்பு கருமாரியம்மன் கோவிலில் பொட்டுத் தாலி திருடியதும்,

20.7.21 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொட்டுத்தாலி திருடியதும் மற்றும் இதுபோன்று திருநெல்வேலி தாழையூத்தில் ஒரு கோவிலில் திருடியதும் ஆக மொத்தம் 12 கோவில்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் குற்றவாளிகள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சண்முக சுந்தரி என்பவர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு செண்பகவள்ளியம்மன் கோவிலில் நகைகளை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி எதிரிகளை கைது செய்து, தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.