சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் (19) என்ற மாணவி சென்னை ஐஐடியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஐஐடி நிறுவனத்தின் சரயு பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்வில் மதிப்பெண் குறைந்து போனாதால்தான் பாத்திமா தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் படிப்பில் முதன்மையான மாணவி பாத்திமா என அவரது பெற்றோர் கூறினர்.
பாத்திமா பயன்படுத்திய செல்போனைப் பரிசோதித்த அவரது தந்தை, அதில் சில பேராசிரியர்களால் மனரீதியாக, தான் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய மரணத்திற்கு அந்தக் குறிப்பிட்ட பேராசிரியர்களே காரணம் என்று குறிப்பெழுதி வைத்திருந்ததாக தெரிவித்து தனது மகள் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை வேண்டும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரம் பரபரப்பாக வெடித்த நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக ஐஐடி வளாகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
ஒவ்வொரு மாணவ மாணவியர், பேராசிரியர்கள், ஐஐடி நிர்வாகிகளிடம் தனியாக காவல் ஆணையரே விசாரணையில் ஈடுபட்டார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”மாணவி பாத்திமா லத்தீப் இறந்தது தொடர்பாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். இந்த வழக்கை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றியுள்ளோம். விசாரணை நடத்துவதற்காக சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை ஆணையர் மெகாலினா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஆவார்.
புலன் விசாரணையை முடித்து உண்மையைக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இந்த சிறப்புக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி சிபிஐயில் பணியாற்றியவர். கடினமான வழக்குகளை விசாரித்து திறம்படச் செயலாற்றியவர்.
மேலும் இந்தக் குழுவில் உதவி ஆணையர் பிரபாகரன் உள்ளார். இவரும் சிபிஐயில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இந்த தற்கொலை சம்பவம் சர்ச்சைக்குரிய விஷயமானதால் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றியுள்ளோம்.
புலன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபற்றி தற்போது வெளியில் சொல்ல இயலாது”.
இவ்வாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.