Police Department News Police Recruitment

அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தி, மருத்துவரைத் தகாத வார்த்தையால் திட்டிய கிராம உதவியாளர் மற்றும் அவரது சகோதரிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகிய இருவரும், தமது தந்தை கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் விஜயவதி என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது வேல்முருகன் மருத்துவரை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டியும், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியும் உள்ளார்.

சுவாமிநாதன், விருத்தாசலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், அரசு தரப்பு சாட்சியங்கள் தெளிவாக உள்ளதால் அரசு ஊழியர் வேல்முருகன் குற்றவாளி என உறுதி செய்து, “இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஐந்து ஆண்டுகள் என பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியதற்காக 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வேல்முருகனின் சகோதரி சுஜாதாவிற்கு 1000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 10 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அரசு மருத்துவமனையை அரசு ஊழியரே சேதப்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.