Police Department News

மதுரையில் கூலி தொழிலாளியை திட்டமிட்டு கொலை செய்த கும்பல்- 3 பேர் கைது

மதுரையில் கூலி தொழிலாளியை திட்டமிட்டு கொலை செய்த கும்பல்- 3 பேர் கைது

மதுரை யாகப்பா நகர், மீனாட்சி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது27).கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு அகன்சா ஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் வாசுதேவன் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஆட்டோவில் 5 பேர் கும்பல் வந்தது. அவர்களைப் பார்த்ததும் வாசுதேவன் வீட்டுக்குள் ஓடி சென்று அறை கதவை மூடிக்கொண்டார். இருந்த போதிலும் அந்த கும்பல் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வாசுதேவன் வீட்டின் வெளியே ஓடினார். அவர் அருகில் உள்ள லாண்டரி கடைக்கு சென்று ஒளிந்து கொண்டார்.

ஆனால் அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேரும் கடைக்குள் புகுந்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த வாசுதேவனை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக அண்ணாநகர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

வாசுதேவனின் தங்கை பூபதி. இவருக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். பூபதியின் நெருங்கிய நண்பர் அரவிந்தன். இவர் அடிக்கடி பூபதி வீட்டுக்கு வருவாராம். அப்போது அவர் பூபதியை கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி பூபதி தனது சகோதரர் வாசுதேவனிடம் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து வாசுதேவன், அரவிந்தனிடம் தட்டி கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் வாசுதேவன் குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்ற அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அங்கு சரியாக வேலை கிடைக்காததால் வாசுதேவன் மீண்டும் குடும்பத்துடன் மதுரைக்கு திரும்பினார்.

இது அரவிந்தனுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர் வாசுதேவனை கொலை செய்ய திட்டமிட்டார். இதுபற்றி தனது நண்பர்கள் லப்பர் என்ற முத்துக்குமார், கணேண் பாண்டி, இந்து குமார் மற்றும் ஒருவருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதன் பின்னர் 5 பேரும் சேர்ந்து நேற்று வாசுதேவனை கொலை செய்து உள்ளனர்.

இந்த நிலையில் வாசுதேவனை கொலை செய்த கொலையாளிகள் லப்பர் என்ற முத்துக்குமார், கணேஷ்பாண்டி, இந்து குமார் ஆகிய 3 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அரவிந்தன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.