Police Department News

கடன் தருவதாக கூறி உத்தரபிரதேச தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை வாலிபர் கைது

கடன் தருவதாக கூறி உத்தரபிரதேச தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை வாலிபர் கைது

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்தவர் பங்கஜ் கபூர். தொழிலதிபர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கூறியிருப்பதாவது:-
நான் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் எனது தொழில் சற்று நலிவடைந்தது. இதனால் தொழில் அபிவிருத்திக்காக ரூ.13 கோடி தேவைப்பட்டது.

அப்போது நண்பர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் நிறுவனம் நடத்தி வந்த பவன்குமார் ராஜேந்திரன் அறிமுகமானார். அவர் எனது தொழில் வளர்ச்சிக்கு பண உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

அதன்படி, அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் என்று டாக்டர் சலாயுதீன் என்பவரிடம் என்னை அறிமுகம் செய்தார். அவர் எங்கள் நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி வரை உதவி செய்ய முடியும் என்று கூறினார்.

அதை நம்பி, நான் ‘தற்போது எனக்கு ரூ.13 கோடி தேவைப்படுகிறது. முதலில் ரூ.5 கோடி கொடுங்கள், அதன் பிறகு மீதமுள்ள ரூ.7 கோடி கடனை வாங்கி கொள்கிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவர்கள், நீங்கள் வாங்கும் கடனுக்கு 6 மாத வட்டி முதலில் எங்களுக்கு தர வேண்டும் என்று கூறினார்கள். அதன்படி நான் ரூ.32 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் சொன்னபடி எனக்கு ரூ.5 கோடி பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.

எனவே என்னிடம் பணம் பெற்று மோசடி செய்த டாக்டர் சலாயுதீன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சந்தோஷ் வாசுதேவ், கணேஷ், ராமதாஸ், சதாம் உசேன், நசீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நொய்டா தொழிலதிபரிடம் கடன் கொடுப்பதாக கூறி ரூ.32 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான டாக்டர் சலாயுதீன் கூட்டாளியான சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (30) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.