சேலத்தில் இருந்து சென்னைக்கு லாரிஒன்றை உதய்சங்கர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்தபோது லாரி பழுதாகி நின்றது. அப்போது அங்கு காரில் வந்த 3 பேர், தங்களை செய்தியாளர்கள் எனக்கூறி, ‘நீங்கள் டயர் திருடி விற்பதாகபுகார் வந்துள்ளது’ என கூறிபுகைப்படம் எடுத்துள்ளனர். இந்த செய்தியை பத்திரிகையில் பிரசுரிக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உதய்சங்கர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிபோதையில் இருந்த மூவரும் லாரி ஓட்டுநர் உதய்சங்கரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர்.
இந்நிலையில் உதய்சங்கர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ரோந்து போலீஸாரையும் 3 பேரும் தாக்கமுயன்றனர். இதைத்தொடர்ந்து அங்குவந்த மறைமலைநகர் போலீஸார் போதையில் இருந்த 3 பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் மூவரும் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்ததர்காஸ் பகுதியைச் சேர்ந்த கோமளபதி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி, குன்னவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதுபோன்ற தொடர் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அவர்கள் ‘மக்கள் கர்ஜனை’ என்கிற பெயரில் பத்திரிகைஅடையாள அட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்துபிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார், அடையாளஅட்டை, பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.