Police Department News

நள்ளிரவில் பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை- தாயின் கை துண்டானது

நள்ளிரவில் பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை- தாயின் கை துண்டானது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் மகாலட்சுமி தனது கணவருடன் குடும்பம் நடத்த மனமின்றி விரக்தியில் இருந்து வந்தார்.

இதையடுத்து திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு அறிவுரைகள் கூறியும் மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
இந்த விஷயம் அறிந்த முன்னாள் காதலன் சதீஷ் குமார் மீண்டும் மகாலட்சுமியிடம் காதலை தொடர்ந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயங்களில் மகாலட்சுமி அடிக்கடி சதீஷ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் கடுமையான ஆத்திரம் அடைந்தார். மேலும் சதீஷ்குமாரையும், மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும் சதீஷ்குமார் அத்துமீறி மகாலட்சுமியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட எண்ணிய பிரவீன் குமார், சதீஷ்குமாரை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரவீன்குமார், அக்காவின் முன்னாள் காதலன் சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனை சற்றும் எதிர்பாராத சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற பிரவீன்குமார், சதீஷ்குமாரை அங்கிருந்த நாடக மேடை அருகே சுற்றி வளைத்து மடக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையை தனியாக துண்டித்து நாடக மேடையின் நடுவில் வைத்தார்.

இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார், அதே கொலை வெறியுடன் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த பிரவீன்குமாரின் தாய் சின்ன பிடாரி வீட்டிற்குள் வந்தார்.
ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றி மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று தடுக்க முயன்றார். ஆனாலும் வெறி அடங்காத பிரவீன் குமார் தாயின் கையையும் வெட்டி துண்டாக்கினார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக சதீஷ் குமாரின் தம்பி முத்துக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்டு கிடந்த சதீஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கை துண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான பிரவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.