காஞ்சிபுரம்: அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர், நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எலப்பாக்கத்திலிருந்து வேகமாக வந்த, ‘இன்னோவா’ காரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மடக்கினர். காரில் வந்தவர்களை விசாரித்த போது, கார் கடத்தல் கும்பல் என்பது தெரிந்தது. மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே கார்களை இவர்கள் கடத்தியதும் தெரிந்தது.
நள்ளிரவில் கார்களை மடக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, உரிமையாளர்களிடம் இருந்து கார்களை கடத்துவது இவர்களின் பாணி. மேலும், திருட்டுக் கார்களை பயன்படுத்தி, சாராயக் கடத்தலில் ஈடுபட்டதும், காவல்துறை விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, காரில் வந்த, புதுச்சேரி, வானூர் பகுதியைச் சேர்ந்த குணசேகர் (35) சுரேஷ் (25) குமார் (23) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த கார் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.