Police Department News

தனிமைப்படுத்தப்பட்ட நபர் மாஸ்க் இல்லாமல் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு: எச்சரித்து அனுப்பிய போலீஸார்

வெளிநாட்டிலிருந்து விருதுநகர் வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து விருதுநகர் வந்த 190 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற எதற்காகவும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி பலர் வாகனங்களில் வெளியே வந்தனர். ஆங்காங்கே போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, விசாரித்துத் திருப்பி அனுப்பினர். மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் நபர்கள் மட்டுமே குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும், வயதானோர் மற்றும் குழந்தைகளுடன் வாகனங்களில் வந்த நபர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

முகத்தில் மாஸ்க் அணியாமல் வந்த நபர்களையும் போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கார்கள் மற்றும் லாரிகளையும் நிறுத்தி போலீஸார் தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதித்தனர்.

விருதுநகர்- மதுரை சாலையில் போலீஸார் சோதனை நடத்தியபோது வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் பைக்கில் வந்தார். அவரை நிறுத்தி போலீஸார் விசாரித்தபோது அவர் வெளிநாட்டிலிருந்து வந்ததும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

ஆனாலும், பைக்கில் வந்த அந்த இளைஞர் தனக்கு எதுவும் இல்லை எனக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாஸ்க் அணியாமல் வீட்டிலிருந்து வெளியே வந்தது மட்டுமின்றி வாகனத்தில் ஊர் சுற்றுவது மிகப்பெரிய குற்றம் என்றும் உடனடியாக வீடு திரும்பவில்லையெனில் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்வோம் என போலீஸார் எச்சரித்தனர். அதையடுத்து பைக்கில் வந்த இளைஞர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதேபோன்று, மாவட்ட எல்லைகளில் உள்ள 16 செக்போஸ்ட்களிலும் போலீஸார் நின்று, மாவட்ட எல்லைக்குள் மற்றும் மாவட்ட எல்லையைத் தாண்டிச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுத்தனர். அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.