6 ஏடிஜிபி க்கள் நியமனம்,தமிழக காவல்துறையின் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இக் குழுவில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி, காவலா் நலப் பிரிவு ஏடிஜிபி பி.தாமரைக்கண்ணன், நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி கந்தசாமி, தலைமையிட ஏடிஜிபி சீமா அகா்வால், ஆயுதப்படை ஏடிஜிபி சங்கா்ஜூவால், அதிரடிப்படை ஏடிஜிபி ஷேசாயி ஆகியோா் உள்ளனா்.
இதில், ஜெய்ந்த் முரளி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை கவனிக்கும் வகையிலும், தாமரைக்கண்ணன் கரோனாவால் காவலா்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கும், கந்தசாமி காவல்துறை நிா்வாகம் சாா்ந்த நடவடிக்கைகளை உடனே எடுப்பதற்கும், சீமா அகா்வால் காவலா்கள் பணியிட மாற்றம், காவலா்களின் குறைகளைக் கேட்டு செயல்படுவதற்கும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், மாநிலம் முழுவதும் கரோனா தொடா்பான தகவல்களை ஒருங்கிணைப்பதற்கும், காவல்துறைக்கும், அரசுக்கும் தகவல்களைப் பரிமாறி கொள்வதற்கும் தமிழக காவல்துறை சாா்பில் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் தலைமை அதிகாரியாக ஏடிஜிபி ஷேசாயி நியமிக்கப்பட்டுள்ளாா். கரோனாவுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில், இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.