Police Department News

பிரபல கொள்ளையன் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகரை சேர்ந்தவர் விஜயன் என்கிற விஜயகுமார்(29). பிரபல கொள்ளையனான இவர் மீது சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடைசியாக விஜயகுமாரை வாழப்பாடி காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த 19-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் முத்தம்பட்டி ரெயில்வே தண்டவாள பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருந்தாலும் கொலை நடந்த பகுதி வாழப்பாடி என்பதால், வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், ரவுடி விஜயகுமாரை கொலை செய்தது சேசஞ்சாவடியை சேர்ந்த கள்ளக்காதலியான பெமினாமேரி(26), அவருடைய புது கள்ளக்காதலன் கார்த்திக்(24) மற்றும் இவருடைய நண்பர் வெங்கடாசலம்(43) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:-

கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த பெமினாமேரிக்கும், கொள்ளையனான விஜயகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. விஜயகுமார் தான் கொள்ளையடித்த நகை, பணத்தை அவருக்காக செலவு செய்து வந்தார். இருப்பினும் அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததால் அவருடனான தொடர்பை பெமினாமேரி கைவிட நினைத்தார். இதற்கிடையில் முத்தம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

விஜயகுமார் சிறையில் இருந்ததால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இதற்கிடையில் கடந்த 19-ந் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விஜயகுமாருக்கு இதுபற்றி தெரியவந்தது. இதையடுத்து அவர் பெமினாமேரியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு பெமினாமேரிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கார்த்திக்குடன் பழகினால் அவரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதனால் விஜயகுமாரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று இரவில் முத்தம்பட்டி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு விஜயகுமாரை, பெமினாமேரி வரவழைத்தார். இதையடுத்து உல்லாசமாக இருக்க தயாரான நேரத்தில் விஜயகுமாரை, அங்கு மறைந்திருந்த கார்த்திக் பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

இந்த கொலையை தற்கொலையாக மாற்றிட தண்டவாள பகுதிக்கு விஜயகுமாரின் உடலை இழுத்து சென்று பெமினாமேரி, கார்த்திக், வெங்கடாசலம் ஆகியோர் போட்டனர். இவ்வாறு காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு மாற்ற ரெயில்வே காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.