


மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீர காளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது
ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவதால் மதுரை மாநகரம் முழுவதுமே விழாக்கோலத்தில் காணப்படும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உற்சவ விழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 31-ம் தேதி மாலையில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து அம்மனுக்கு தினமும் காலை, மாலை என இருவேளைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் குவிந்தனர். அலகு குத்தியும், பால் குடம் சுமந்து வந்தும், வேல்குத்தியபடியும், பறவை காவடி எடுத்தபடியும் ஊர்வலமாக வைகை ஆற்றிற்கு சென்ற அவர்கள், அங்கு அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேல் குத்தியபடியும், 50-க்கும் மேற்பட்டோர் 5 அடுக்கு, 3 அடுக்கு என 30 அடி முதல் 50 அடி வரை பறவை காவடி, தேர்காவடி, பால்காவடி எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். மேலும், மீனாட்சியம்மன், கருப்பசாமி, பத்ரகாளி வேடமணிந்தபடியும் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பக்தி கோஷம் முழங்கியபடி சென்றனர். 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றதால் மாநகரின் சாலைகள் முழுவதும் திருவிழா கோலம் பூண்டது.
காவடி எடுத்துசெல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகளை கையில் எடுத்து ஆசிர்வதிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் அசம்பாவிதங்களையும் தவிர்க்கவும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழா பாதுகாப்புக்காக தெற்கு வாசல் சரகம் உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கதிர்வேல் அவர்கள் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி சந்தனமாரி அவர்கள் உதவி ஆய்வாளர் சக்திவேல் IS போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி கூடுதல் துணை ஆணையர் திருமலை உதவி ஆணையர் மாரியப்பன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கனேஷ்ராம் மற்றும் ஆயுதப்படை ஊர்காவல்படை காவலர்களும் தக்க பாதுகாப்பளித்தனர் கோவில் கமிட்டி நிர்வாகி இந்து அறநிலையத்துறை எ.சி மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு. நாகராஜ் மற்றும் வீரகாளியம்மன் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் 10ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
