
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்
தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியில் அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பாவூர் வணிகர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது42) என்பவர் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணையில் நடத்தி வரும் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு உரிய அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, தேசிய சுகாதாரக் குழும ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடைய நம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், ஆலங்குளம் சரக மருத்துவ ஆய்வாளர் பவித்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீ மூல நாதர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ. உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், சுதாகர் உள்ளிட்டோர் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.
