
கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 7 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு அங்கிருந்த பல இன மரங்களை வெட்டும்பொழுது, அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்தி விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (53), குணசீலன் (40), சுதாகர் (33), சரவணன்(33), ரமேஷ்(28), கோவிந்தசாமி(43), இளவர சன்(33) ஆகிய 7 பேரையும் பிடித்தனர்.
மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற அவர்கள் மீது கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெட்டி கடத்திய மற்ற 5 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
