
இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயா்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலக நேரடி உதவி பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநா்களாக பதவி வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி பதவி உயா்வு கோரியிருந்தவா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சரவணன், வைத்தியநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எச்சரித்திருந்தனா். ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் பதவி உயா்வு தொடா்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஸ்வா்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய 2 பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை அக். 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
