
கடந்த 8.1.2020 தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியின்போது சுடப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நிவாரணத் தொகையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வழங்கினார்.
தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் 8.1.2020 அன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர்.
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்த முதல்வர், உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடுத் தொகை அறிவித்தார்.
அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பினமாக அவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மீண்டும் கடந்த 10-ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தார், இன்று காலை தலைமைச் செயலகம் அழைத்து வரப்பட்டனர். வில்சன் மனைவியிடம் தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலர்.எஸ்.கே. பிரபாகர், சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு. வடநேரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.