பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் மீது தாக்குதல்.
சென்னை ஓட்டேரியில் சட்டவிரோதமாக மது விற்ற கும்பலை பிடிக்கச் சென்ற போது பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் தாக்கப்பட்டனர்.
ஓட்டேரி, பிரிக்ளின் சாலையில் நள்ளிரவில் ஸ்ட்ரஹான்ஸ் சாலையைச் சேர்ந்த சரவணப்பெருமாளிடம் அடையாளம் தெரியாத நபர் மது பானம் தருவதாக கூறி அவரிடமிருந்து 500/− ரூபாயை பறித்து சென்றார்.
சிறிது நேரத்தில் மற்றொரு நபர் அவரிமிருந்து 200 ரூபாயை பறித்து ஒரு மது பாட்டிலை கொடுத்து அடித்து விரட்டியுள்ளனர்.
இது குறித்து விசாரித்த சார்பு ஆய்வாளர் ஷஜிபா, அவரை மீண்டும் அதே பகுதியில் மது பானம் வாங்க அனுப்பி மது விற்ற சேகரை பிடித்தார். அவரது வீட்டிலிருந்து 180 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது சேகருக்கு ஆதரவாக ஐந்து பெண்கள் உட்பட ஏழு பேர் திரண்டனர். அவர்கள் சார்பு ஆய்வாளரின் இரு சக்கர வாகனத்தின் சாவியை பறித்து கொண்டு அவரை தாக்கினர். தகவலறிந்த ரோந்து போலீசார் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், தலைமை காவலர் சங்கர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பெண் உதவி ஆய்வாளரை மீட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மூன்று போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.