
தூத்துக்குடியில் தாய்-மகளுக்கு கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர், தாய் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி (32), இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). உமையர்கனி தனது கணவர் காளிதாஸை கடந்த ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை உமையர்கனி மகள் எஸ்தருடன் தெர்மல் நகர் கேம்ப் 1ல் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே செல்லும்போது துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரி அவர்களது ஸ்கூட்டரில் மோதியது. இதில் உமையர்கனியும் அவரது மகள் எஸ்தரும் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினர்.
இவ்விபத்தில் சிறுமி எஸ்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த உமையர் கனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி எஸ்தரின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தால் துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், டவுன் டி.எஸ்.பி. கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
