Police Department News

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது; 116 பவுன் நகைகள் மீட்பு

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது; 116 பவுன் நகைகள் மீட்பு

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை போன வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 116 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
நிதி நிறுவன அதிபர்
திண்டுக்கல் கிழக்கு ரத வீதி, ஜான் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி கவிதா (45). இவர்கள் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி இரவு தங்களது வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கண்ணன் வீட்டின் மொட்டை மாடிக்கு 2 மர்மநபர்கள் ஏறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதற்கிடையே மறுநாள் காலையில் கவிதா எழுந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருப்பதையும், அதிலிருந்த 145 பவுன் நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 35), நவாஸ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து புளியங்குடி சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்தனர்.
116 பவுன் பறிமுதல்
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளில் 116 பவுன் நகைகளை அடகு வைத்ததும், மீதமுள்ள நகைகளை விற்று சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கூறிய விவரங்களின் அடிப்படையில் அடகு வைக்கப்பட்டு இருந்த 116 பவுன் நகைகள் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.