Accidents

“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை!

“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை!
திருமணமான பத்து நாள்களிலேயே கணவனை இழந்த மனைவியின் வேதனை சென்னைவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், அரவிந்த். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்ற தம்பதிகள், இப்படி ஒரு சோகத்தை எதிர்கொள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மணாலியின் இயற்கை அழகைச் சுற்றிப்பார்த்த தம்பதிகள், மணாலிக்கு அருகேயுள்ள தோபிக்குச் சென்றுள்ளனர். அங்கு, பிரபலமான ‘பாரா க்ளைடிங்’ விளையாட்டில் ஈடுபட அரவிந்த் டிக்கெட் வாங்கியுள்ளார். பாராசூட்டில் பயிற்சிபெற்ற ஒருவருடன் சுற்றுலாப் பயணி ஒருவரும் இணைந்து பறப்பதுதான் இந்த ‘பாரா க்ளைடிங்’ விளையாட்டு. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவரின் விருப்பத்துக்காக சம்மதித்து ப்ரீத்தியும் உற்சாகத்துடன் கணவர் பறப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.
விமானி ஹரி ராமுடன் பறந்துகொண்டிருந்த அரவிந்த், திடீரென பாராசூட்டில் தடுமாற, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுதாரிப்பதற்குள், பாராசூட்டில் இருந்து கீழே விழுந்த அரவிந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். ப்ரீத்தி கண் முன்னாலேயே நடந்த இந்த கோரச் சம்பவம், அவரை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. அரவிந்த்தின் உடலைப் பெறுவதற்காக, அவரது உறவினர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்குப் பறந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குலு மாவட்ட எஸ்.பி., பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால்தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “பாராசூட் விமானி ஹரி ராமும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். 336, 304 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தக் கூறியுள்ளோம்” என்றுள்ளார்.
அரவிந்த் குடும்பத்தாரிடம் பேசினோம். “பாரா க்ளைடிங் விளையாட்டுக்கு அரவிந்த் கிளம்பியபோதே வேண்டாமென ப்ரீத்தி தடுத்துள்ளார். த்ரில் விளையாட்டுகளில் ஆர்வம்கொண்ட அரவிந்த் விடாப்பிடியாக இருந்ததால், வேறு வழியில்லாமல் ப்ரீத்தியும் வழியனுப்பியுள்ளார். ‘அப்பவே வேண்டாம்னு சொன்னேனே… கேட்டீங்களா?’ எனக் கணவரின் உடலைப் பார்த்து ப்ரீத்தி அழுதது தாங்க முடியாத சோகம். திருமணமான பத்தாவது நாளே இருவரின் வாழ்க்கையும் சூனியமாகிவிட்டது” என்று கண்ணீர் சிந்தினர்.
பாரா க்ளைடிங் விளையாட்டில் எவ்வளவு த்ரில் இருக்குமோ, அதே அளவுக்கு ஆபத்தும் உள்ளது. அதில் விளையாடுபவர்கள், தகுந்த எச்சரிக்கையுடன் ஈடுபடுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் நல்லது.


போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.