Police Department News

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த லோகநாதனுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.