Police Department News

கார் ஏற்றி தாயை கொன்ற மகன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

கார் ஏற்றி தாயை கொன்ற மகன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

செங்கோட்டை தாலுகா அச்சன்புதூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 62). இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), உதயமூர்த்தி (38) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று காலையில் முருகம்மாள் தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் அச்சன்புதூர்-சிவராம்பேட்டை சாலையில் சென்றார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகம்மாள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து இலத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், அது விபத்து இல்லை என்பதும், சொத்து தகராறில் முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன் காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. மோகனுக்கும், அவரது தாய் முருகம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் முருகம்மாளை காரை ஏற்றி கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் ஒருவரின் காரை வாங்கி கொண்டு நெல்லைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். முருகம்மாள் தனது இளையமகனுடன் சென்று கொண்டிருந்த நேரத்தில் அச்சன்புதூர் காட்டுப்பகுதியில் வைத்து காரால் இடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது மோகன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.