Police Department News

கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

விசாரணையில் அரிசிபாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 20) என்பவருக்கும், மாணவிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. விக்னேஸ்வரனை தேடியபோது அவரும் மாயமாகி இருந்தார். இதனால் விக்னேஸ்வரன் தான் மாணவியை அழைத்துச் சென்று இருக்க வேண்டும் என போலீசார் கருதினர்.

இதைத்தொடர்ந்து விக்னேஸ்வரனை தேடியபோது அவர் வடவள்ளி பகுதியில் உள்ள அவரது உறவுப் பெண் வீட்டில் பதுங்கி இருந்தார். அங்கு மாயமான மாணவியும் இருந்தார். மாணவியை போலீசார் மீட்டனர். 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை திருமண ஆசை காட்டி விக்னேஸ்வரன் கடத்திச் சென்றுள்ளார். பழனிக்கு அழைத்துச் சென்று கோவிலில் வைத்து மாணவியை அவர் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் மருதமலை கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கிருந்து வடவள்ளியில் உள்ள உறவுப்பெண் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று தங்கி இருந்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் போலீசுக்கு புகார் சென்று சிக்கிக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.