மனம்என்னும்தோட்டத்தில்
மனிதேநயம் மலரட்டும்
🙏காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.பி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட காவல் துறை அலுவலகங்களில் ஆய்வு நடத்துவதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜ் காஞ்சிபுரம் வந்திருந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது பகல் 1 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்த பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி விருந்தினர் இல்லத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றது.
இதனை தொடர்ந்து உள்ளே சென்ற கன்றுக்குட்டியின் கால் குழாய்களின் இடைவெளிக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் நகர முடியாமல் அந்த இடத்திலேயே விழுந்த கன்று வலியால் அலறியது. உடனே தாய் பசுவும் கதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த டிஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் எஸ்.பி சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்க தீயணைப்புத் துறைக்கு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கன்றுக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. இதன் பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டபடி கன்றுக்குட்டி தாயுடன் துள்ளி ஓடியது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் காவல்துறையின் மனித நேயத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம்
மாவட்ட நிருபர் ம.சசி