Police Department News

புளியங்குடியில் பரபரப்பு பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை

புளியங்குடியில் பரபரப்பு பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை

புளியங்குடியில் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து நீரில் முழ்கடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9வது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் (22) தனியாக வசித்து வருகிறார்.

மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த 17ம் தேதியன்று இரவு வேலை முடிந்து மகாலட்சுமி வீடு திரும்பாததால் மாரியம்மாள் உறவினர் வீடுகளில் எல்லாம் தேடினார்.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மறுநாள் (18ம் தேதி) காலை சிந்தாமணியில் மாரியப்பன் (42) என்பவரது தோட்டத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் கிடப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மாரியம்மாள் மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலில் எஸ்ஐ சஞ்சய் காந்தி, உடையார், விஜயபாண்டி முருகேசன், பால்ராஜ், மாடசாமி, கன்னிராஜ், சந்தன பாண்டி, சுந்தர், செய்யது அலி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.

அப்போது, மகாலட்சுமியை ஒரு நபர் பின்தொடர்ந்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதில் மகாலட்சுமியை பின் தொடர்ந்தவர் சிந்தாமணி அம்பேத்கர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (35) என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மகாலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சம்பவத்தன்று (ஞாயிறு) இரவு மகாலட்சுமி, வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது மழை பெய்ததால் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை.

இதை நோட்டமிட்ட கருப்பசாமி, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை வழி மறித்து உறவுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அவர் மறுத்ததால் வயலில் உள்ள நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான கருப்பசாமி நேற்று கழிவறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்ததில் அவரது கை முறிந்தது.

Leave a Reply

Your email address will not be published.