திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வீடு மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல், தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரை குத்திக் கொலை செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயலெட்சுமி. புதிய தமிழகம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த குமார், அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரது மகள் அனுசுயாவின் கணவர் செந்தில்குமார்(30) எம்இ படித்தவர். திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். பாளையங்கோட்டை அண்ணா நகரில் உள்ள வீட்டில் இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். நேற்று காலையில் 2 கார்களில் குமார் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், காம்பவுண்ட் சுவர் மீது ஏறிக் குதித்து உள்ளே புகுந்தனர். வீட்டு கதவில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அங்கு நின்ற செந்தில்குமாரை அவர்கள் சரமாரியாக குத்தினர். குமார், விஜயலெட்சுமி இருவரும் அவர்களைத் தடுக்க முயன்றனர். இருவரையும் வெட்டிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செந்தில்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
துணை காவல் ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, சுகுணாசிங் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து, தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.