Police Department News

ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்க வைத்தேன்; காதலித்து விலகியதால் ஆத்திரம் அடைந்தேன்: அஸ்வினி கொலைவழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்கவைத்த பிறகு காதலித்து விலகியதால் ஆத்திரமடைந்து மாணவி அஸ்வினியை கொலை செய்ததாக அழகேசன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அழகேசன், போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

அஸ்வினியும் நானும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தற்செயலாக பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரிடம் மனதை பறிகொடுத்தேன். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என ஆசைப்பட்டேன். அஸ்வினியைப் பார்க்க அவர் வீடு இருக்கும் பகுதிக்கு அடிக்கடி செல்வேன். பின்னர், அவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்றேன். முதலில் என்னை வெறுத்த அஸ்வினி, பின்னர் என்னிடம் பேச ஆரம்பித்தார். நானும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்கள் குடும்பம் ஏழ்மையில் இருந்தது. அதனால் அவர்களின் குடும்பத்துக்கு பண உதவி செய்தேன். மேலும், அஸ்வினியின் படிப்புச் செலவுக்கும் பணம் கொடுத்து உதவினேன். சுமார் ரூ.2 லட்சம் வரை செலவு செய்திருப்பேன்.

கடந்த சில மாதங்களாக அஸ்வினி என்னிடம் இருந்து விலகிச் செல்வதுபோல் உணர்ந்தேன். அவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் வீடு புகுந்து கட்டாயப்படுத்தி அஸ்வினியின் கழுத்தில் தாலி கட்டினேன். இந்த விஷயம் அவரது தாயாருக்கு பிடிக்கவில்லை. அதுமுதல் எங்கள் பிரிவு அதிகரித்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு என் மீதே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். நானும் பொறுத்துக் கொண்டேன். இதற்கிடையில், அஸ்வினியை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு எனக்குத் தெரியாமல் அனுப்பி வைத்து விட்டனர். அந்த வீட்டையும் தேடிக் கண்டுபிடித்தேன்.

அஸ்வினியின் இறுதி முடிவைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். என்னுடன் வாழ்வதாக இருந்தால் அவருக்காக காத்திருக்கலாம். இல்லையென்றால் எனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்று ஆத்திரம் ஏற்பட்டது. இதற்காக இரண்டு கத்திகளை வாங்கினேன். கத்திக்குத்தில் இருந்து தப்பித்து விட்டால் மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தி விட வேண்டும் என்ற முடிவில்தான் அவர் படித்து வந்த கல்லூரிக்கு நேற்று சென்றேன்.

கல்லூரியை விட்டு வெளியே வந்த அஸ்வினி, என்னுடன் வாழ மறுத்தார். தன்னை மறந்து விடும்படி கூறினார். அஸ்வினி என்னை ஏமாற்றியதால் விரக்தியடைந்த நான் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கதறி அழுத மாணவி

கொலையை நேரில் பார்த்த கிருஷ்ணன் (45) என்பவர் கூறியதாவது:

நான் லோகநாதன் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்தேன். மதிய நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அப்போது, இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியை வைத்து விரட்டிக்கொண்டிருந்தார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் தடுக்கி விழுந்த அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார். நான் ஓடிச்சென்று தடுக்க முயன்றேன். என்னுடன் மேலும் சிலரும் அந்த இளைஞரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. அந்த கோபத்தில் கொலை செய்த இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்தோம். தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக அவரது கையை பின்னால் கட்டி சாலையோரம் அமர வைத்திருந்தோம். சாகும் நேரத்தில் அந்த மாணவி, ‘என்னை விட்டு விடு’ என கையை கூப்பிக்கொண்டு கொலையாளி முன் கதறி அழுதது என்னை உலுக்கி விட்டது.

இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.

அஸ்வினியின் பெரியம்மா சரஸ்வதி கூறும்போது, ‘அஸ்வினியை அழகேசன் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்தார். ஒருமுறை ‘உன்னை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டினார். அதைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், போலீஸார் அந்த புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சமாதானம் செய்துவைத்தனர். அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.