ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பொய்யாழி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மூத்த மகன் ரவிச்சந்திரன்(49). இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் சொத்து பிரிப்பது தொடர்பாக தற்போது பரோலில் (விடுமுறை) வந்துள்ளார்.
இந்நிலையில், ரவிச்சந்திரன் தனது தாயார் பெயரில் உள்ள பிளாட்டுகளைப் பார்ப்பதற்காக நேற்று மதுரை வந்தார்.
பின்னர் மாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரை வந்த ரவிச்சந்திரனுக்கு டிஎஸ்பி தனபால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.