மெரினா கடற்கரையில் திடீர் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட விஷயங்களை காவல் ஆணையர் மெரினாவில் நேரில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதால் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் அதிகப்படுத்தப்பட்டது.
ஆனாலும், சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் போராட்டக்காரர்களும் கலந்தனர். பின்னர் கடல் நீர் அருகே வரிசையாக நின்று பதாகைகள் ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோஷமிட்டனர்.
இதை முகநூலில் பலரும் ஷேர் செய்ததால் அது காட்டுத்தீயாய் பரவியது. உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் வேகமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.
கைது செய்யும் போலீஸாருக்கும் சேர்ந்துதான் போராடுகிறோம் என்று பேட்டி அளித்த இளைஞர்கள் இந்த போராட்டம் வெல்லும் என்று கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள் விபரம்:
1.பரத் (23), 2.சுரேஷ்பாபு (46), 3.பிரசாந்த் (23), 4.திலிப் குமார் (32), 5.ப்ரியா (31), 6.யாஹிம் பரத் (37), 7.சந்தோஷ் (24), 8.திலிப்குமார் (28), 9.சரவணன் (26), 10.கெய் ஆண்ட்ரூஸ் (29), 11.ஜோவம் (23), 12.டீமோஹி (35), 13.ஆர்த்தி (25), 14.ராஜ்குமார் (47), 15.ஜெயகுமார் (35), 16. முகமது அலி ஜின்னா (35), 17.தனவேல் (31) உட்பட 18 பேர் கைதானார்கள். காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை மெரினா கடற்கரையில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு அப்போது உடனிருந்தார்.