நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி, கட்டப்பெட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் என்பவரது மகன் சிவலிங்கன் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 9 சிறுமியின் பெற்றோர் தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுமி மட்டும் தனியே இருப்பதை தெரிந்து கொண்டு, அவரது வீட்டிற்கு சென்று சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், பாலியல் தொல்லையும் அளித்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் பணிக்கு சென்று மாலை வீடு திரும்பியபோது இந்த சம்பவம் குறித்து சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் இந்த வழக்கு குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிவலிங்கன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.