
தமிழகம் முழுவதும், 1120 போலீசார் அதிரடி மாற்றம். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக எஸ்.பி.,கள் முதல் டி.ஜி.பி.,கள் வரை மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் காவலர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு மாற்றம் கேட்டு பல மாதங்களாக காத்திருந்தனர்.
காவலர்களை பொறுத்தவரை, மாவட்டங்களுக்குள் மாற்ற வேண்டும் என்றால் எஸ்.பி யே மாற்றி விடுவார். சரகத்திற்குள் மாற்ற வேண்டுமென்றால் டி.ஐ.ஜியும், மண்டலத்திற்குள் மாற்ற வேண்டுமென்றால் ஐ.ஜி யும் உத்தரவு பிறப்பிப்பார்கள், ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் மாற்ற வேண்டுமென்றால் ஏ.டி.ஜி.பி., அல்லது டி.ஜி.பி.,ஆகியோர் மாறுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதில் காவலர்களை பொறுத்தவரை தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இருக்கும் போது பணி மாறுதல் கிடையாது. ஆயுதப்படைக்கு பதவி உயர்வு பெறும் போது மாறுதல் பெறலாம். சிலர் ஆயுதப்படைக்கு சென்ற பிறகு பணி மாறுதல் பெறாமல் பணியாற்றுவார்கள். அதன் பின்னர் ஆயுதப்படையிலிருந்து போக்குவரத்து அல்லது சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பதவி உயர்வு பெறும் போது சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பும் காவலர்கள் பணி மாறுதல் கேட்பார்கள். ஆனால் விண்ணப்பம் செய்தவர்களில் சீனியாரிட்டி அடிபகபடையில் காலியிடங்களில் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் பல மாதங்களாக விண்ணப்பம் கொடுத்து காத்திருந்தவர்கள் பணி மாறுதல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர், இந்த தகவல் தற்போது டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிற்கு தெரிய வந்ததும், அவ்வாறு பணி மாறுதல் கேட்ட சுமார் 1120 காவலர்களுக்கு நேற்று முன் தினம் பணி மாறுதல் வழங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார் ஏற்கனவே காவலர்களுக்கு வாரவிடுமுறை வழங்கப்பட்டது. தற்போது மொத்தமாக பணி மாறுதல் வழங்கப்பட்டது. காவலர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
