கொலை குற்றவாளிகள் கைது; எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியை சேர்ந்த தாமோதர பாண்யடியன் மகன் கனகராஜ் (38) என்பவரை கடந்த 14ம் தேதி இரவு அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேலும் இதை தடுக்க சென்ற கனகராஜின் தாயார் பார்வதி (59) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பார்வதி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, டி.எஸ்.பி. உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் எஸ்.ஐ. நாராயணனசாமி, தலைமைக் காவலர்கள் முருகன், அமல்ராஜ், உலகநாதன், முதல்நிலைக் காவலர்கள் ஆனந்த், மைதீன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததிலும், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதிலும் மேலபாண்டவர் மங்கலத்தை சேர்ந்த பூலோகப்பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (25), கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேந்திரன் (21), அன்னை தெரசா நகரை சேர்ந்த ரத்னவேல் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார் (25), சாஸ்திரி நகரை சேர்ந்தவர்களான முருகேசன் மகன் சிவபெருமாள் (25), மேலும் அதே பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் சரவணக்குமார் (21). ஆகியோர் முன்விரோதம் காரணமாக கனகராஜை கொலை செய்ததும் தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் மேற்படி 5 பேரையும் கைது செய்து, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.
