
மதுரை திருமங்கலம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
