சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகரில் வசித்து வந்த பிரபாகரன் வ/27, த/பெ. ஆனந்தன் என்பவர் கடந்த 10 வருடங்களாக அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதியில் ஓம் பிளாஸ்டிங் & கோட்டிங் என்ற பெயரில் இரும்பு வெல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்துள்ளார். கடந்த 22.11.2019 அன்று காலை 10.30 மணியளவில் பிரபாகரன் வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை ஆனந்தன் பிரபாகரனை போன் மூலம் தொடர்பு கொண்டபோது போனை எடுக்காததால் சந்தேகமடைந்து இரவு 11.00 மணியளவில் மேற்படி கம்பெனிக்கு சொன்று பார்த்தபோது பிரபாகரன் இடது பக்க தலை, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்படி கம்பெனியில் வட மாநிலத்தை சேர்ந்த ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் சொந்த ஊர் செல்ல வேண்டி சம்பள பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு பிராபகரன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் மதியம் பிரபாகரன் தூங்கி கொண்டிருந்த போது அவரது அறைக்கு சென்று அருகில் கிடந்த இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கிவிட்டு அவரது பையிலிருந்த ரூ.4,600/- மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு பீகார் மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.
பீகார் மாநிலத்திற்கு தப்பிச்சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கடந்த 24.11.2019 அன்று விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கடந்த 27.11.2019 அன்று பௌரித் கிராமத்தில் பதுங்கிருந்த ரவுசன்மாஞ்சி, வ/21, த/பெ.பல்கிசுன், கெவாலி கிராமம், நாளந்தாமாவட்டம், பீகார் மாநிலம் மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் என இருவரை கைது செய்தனர்.
சிறப்பாக புலனாய்வு செய்து மேற்படி ஆதாயகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை பீகார் மாநிலத்திற்கு சென்று கைது செய்த T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R..விஜயராகவன் தலைமையில் , T-1 அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.சையத் முபாரக், தலைமைக்காவலர்கள் திரு.P.சார்லஸ் (த.கா.36030), திரு.M.அன்பழகன் (த.கா.36120) திரு.P.சதீஷ் (த.கா.36369) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (2.12.2019) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.