
கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்: 30 மோட்டார் சைக்கிள்கள்-கார் உடைப்பு
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருமோகூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காலமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது.
நேற்று மாலை சுவாமி-அம்பாள் சட்டதேரில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு மெயின்ரோட்டில் உள்ள கலையரங்கத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அங்கு திரண்டிருந்த இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். ஆனால் இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினர் வசிக்கும் காலனிக்கு நேற்று நள்ளிரவு கம்பு, கல் போன்ற ஆயுதங்களுடன் கும்பலாக புகுந்தனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சேதமானது.
இதனை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார், செல்வகுமார் உள்பட 3 பேர் மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அவர்கள் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சீதா ராமன், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தாக்குதலில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
தாக்குதல் தொடர்பாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் நடந்த இந்த மோதல் சம்பவம் காரணமாக திருமோகூரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
