கார்கள் அடுத்தடுத்து மோதல்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ!
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புறவழிச் சாலையில் கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பணி நிமித்தமாக திண்டுக்கல் பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த கார் வத்தலக்குண்டு அருகே புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே வாழைத்தார் ஏற்றிவந்த மினி லாரியின் மீது தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று மோதியது. அந்த காரின் பின்னே வந்த எம்.எல்.ஏ மகாராஜன் காரும் அடுத்தடுத்து மோதிக் கொண்ட இந்த விபத்தில் திமுக எம்.எல்.ஏ மகராஜன் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காரில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இச்சம்பவத்தில் வாழைத்தார் ஏற்றி வந்த மினி லாரியில் பயணம் செய்த ஐந்து பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட எம்.எல்.ஏ மகாராஜன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மகாராஜன் பயணத்தை தொடராமல் மற்றொரு காரில் மீண்டும் ஆண்டிபட்டிக்கே திரும்பிச் சென்றார். விபத்து தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.