Police Department News

சமயநல்லூர் அருகே டிரைவர் அடித்துக் கொலை- மருமகன் உள்பட 3 பேர் கைது

சமயநல்லூர் அருகே டிரைவர் அடித்துக் கொலை- மருமகன் உள்பட 3 பேர் கைது

பாட்டில் குத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மாமனாரை கொலை செய்த பிரபு மற்றும் முத்துப்பாண்டி, சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தச்சம்பத்து சுந்தரராஜன் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 52), டிரைவர். இவரது மகள் பிரபாவதி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாவதி அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரை காதலித்தார். இதற்கு ரவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாவதி வீட்டை விட்டு வெளியேறி பிரபுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பரவையில் வசித்து வந்தனர். இதன் காரணமாக ரவிக்கும் அவரது மருமகன் பிரபுவுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தச்சம் பத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பிரபு ரவியின் தாய் சிந்தாயி மீது மோதுவது போல் சென்றுள்ளார். இதை பார்த்த ரவி உடனே பிரபுவை கண்டித்துள்ளார். இதில் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் நேரத்தில் அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

கோபத்துடன் சென்ற பிரபு நேற்று இரவு தனது நண்பர்கள் முத்துப்பாண்டி, கருப்பையா, சுப்பையா ஆகியோருடன் மீண்டும் தச்சம்பத்துக்கு வந்து ரவி வீட்டில் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரவி அவர்களை எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த பிரபு மாமனார் ரவியை உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்தார். மேலும் அவருடன் வந்தவர்கள் பாட்டிலை உடைத்து ரவியை சரமாரியாக குத்தினர். இதனை தடுக்க வந்த சிந்தாயி மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.

பாட்டில் குத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே பிரபு உட்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாமனாரை கொலை செய்த பிரபு மற்றும் முத்துப்பாண்டி சுப்பையா ஆகியோரை கைது செய்தனர். கருப்பையாவை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.