Police Department News

திருமங்கலம் அருகே வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

திருமங்கலம் அருகே வெடி விபத்தில் 5 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை ஊராட்சிக்குட்பட்ட அழகுசிறை கிராமத்தில் அனுசுயா தேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று மதியம் பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கோபி, விக்கி, வல்லரசு, அம்மாசி, ரகுபதி கொண்டம்மாள் ஆகிய 5பேர் உடல் சிதறி பலியானார்கள். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

நிவாரணத்தொகைக்கான காசோலையை அமைச்சர் பி.மூர்த்தி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில் இந்த விபத்து குறித்து சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

பட்டாசு ஆலை உரிமையாளர் அனுசுயா தேவி, அவரது கணவர் வெள்ளையன், ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அனுசுயாதேவி நேற்று இரவு விக்கிரமங்கலம் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சிந்துபட்டி போலீசார் அனுசுயாதேவியை கைது செய்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளையன் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.