`லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்!’ -திருச்சி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக்கல் ராணிபேருந்து பயணிகளிடம் நைசாகப் பேசி மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நகைகளைக் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சிக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் வந்து போகும் பயணிகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும். அந்த வகையில் திருச்சிக்கு வருகை தரும் பயணிகளைக் குறிவைத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். அந்நேரங்களில் லாவகமாகப் பயணிகளிடம் பேசி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.கடந்த சில தினங்களாகத் திருச்சி மத்திய பேருந்து மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் லேப்டாப்புகள் பையோடு திருடப்படும் சம்பவம் அரங்கேறி வந்தது. இதுதொடர்பாக திருச்சி ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த சிலரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸார் கைது செய்தனர்.இதேபோல், கடந்த நவம்பர் 25-ம் தேதி திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு நிதின் முரளி என்பவர் ஒரு கிலோ தங்க நகையுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பேருந்தில் திருச்சி சமயபுரம் 4 ரோடு சாலைப் பேருந்து நிலையத்தில் இருந்து 8 பேர் கொண்ட கும்பல் ஏறியது. அதில் பெண் ஒருவர், நிதின் முரளி அருகே அமர்ந்ததாகவும் தொடர்ந்து அந்தக் கும்பல் நிதின் முரளியின் கவனத்தை திசைதிருப்பி அவரிடமிருந்த தங்கத்தைக் கொள்ளையடித்தனர். மயங்கிக் கிடந்த நிதின் முரளி கண்விழித்து பார்த்தபோதுதான் நடந்த விபரீதம் தெரியவந்தது. இதேபோல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலும் திருட்டு சம்பவங்கள் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.அதிலும் பெண் ஒருவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் நைசாகப் பேசி கைது கைவரிசை காட்டுவது தெரியவந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பார்வதி, குடும்பச் சூழல் காரணமாகத் திருப்பூரை அடுத்த பல்லடம் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது இவர் சொந்த ஊரான ரங்கநாதபுரத்துக்கு வந்து செல்வது வழக்கம்.அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சொந்த ஊருக்கு வந்த பார்வதி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்வதற்காகக் கோவை பேருந்தில் ஏறியுள்ளார். பயணச் சீட்டு எடுத்தவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அருகில் அமர்ந்த பெண் ஒருவர், பார்வதியுடன் நைசாகப் பேச ஆரம்பித்தார்.சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்க அந்தப் பெண் பார்வதிக்கு லட்டு ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்ட பார்வதி, அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அணிந்திருந்த 8.5 பவுன் தங்க நகைகளை லாவகமாக கழட்டிய அந்தப் பெண் பேருந்திலிருந்து இறங்கிச் சென்று விட்டார்.பேருந்தில் மயங்கிய நிலையிலேயே பல்லடம் சென்றார் பார்வதி. அங்கு சிலரின் உதவியோடு மருத்துவ சிகிச்சை பெற்றபிறகே, நடந்த சம்பவங்கள் குறித்து அவருக்குத் தெரியவந்தது.இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு வந்த பார்வதி திருச்சி வழியாகக் கோவை செல்வதற்காக மத்திய பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவரின் ரது அருகே பெண் ஒருவர் வந்து அமர்ந்தார்.அவரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். தனது நகைகளைக் கொள்ளையடித்தது அந்தப் பெண்தான் என்பதை உறுதி செய்துகொண்டவர், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உதவியுடன் அவரை அருகிலுள்ள திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் வசம் ஒப்படைத்தார்.தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கலப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி ராணி என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து பார்வதியிடம் நகைகளைக் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் ராணி பையில் வைத்திருந்த மயக்க மருந்து லட்டுவைக் கைப்பற்றிய போலீஸார், அதில் கலந்துள்ள மருந்து குறித்து ஆய்வு செய்ய லேப்புக்கு அனுப்பியுள்ளனர்.போலீஸாரின் விசாரணையில் பேசிய ராணி, ” குடும்பச் சூழல் காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட நான், மருந்துக்கடைகளில் தூக்க மாத்திரைகளை வாங்கி நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்வேன். எனக்கு லட்டு செய்யத் தெரியும். எனவே, தூக்க மாத்திரைப் பொடிகளை நடுநடுவே வைத்து லட்டு தயாரித்து வைத்துக் கொள்வேன். பேருந்துகளில் ஏறி தனியாக அமர்ந்திருக்கும் பெண்களிடம் பேசி அவர்களுக்கு லட்டு கொடுப்பேன். நான் கொடுத்த லட்டைச் சாப்பிட்டவர்கள் மயங்கியதும் அவர்கள் அணிந்த நகைகளைக் கழட்டி கொண்டே இறங்கி விடுவேன்” எனக் கூறியிருக்கிறார்.கைதுசெய்யப்பட்ட ராணியை போலீஸார் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்